யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது-Crep
August 19, 2010 at 2:44 pm · Posted Public Articles · முக்கிய செய்தி
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 649 இல் இருந்து 30 ஆகக் குறைந்துள்ளது. ஜுலை மாத இறுதியில் கணக்கில் எடுக்கப்பட்ட டெங்கு நோயாளர் நிலைப்பாட்டில் யாழ். மாவட்டம் நான்காவது இடத்துக்கு பின்நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அதிகாரிகளினதும் பொதுமக்களினதும் அக்கறை காரணமாகவே டெங்கு நோயாளர் எண்ணிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரனின் தகவலின்படி இம்மாதம் 13 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் அடுத்த சில தினங்களில் இது மேலும் குறையும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
இவ்வருட முதல் இரு மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 1600 டெங்கு சந்தேக நபர்களில் 1100 பேருக்கு மேல் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக இனங்காணப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் யாழ்ப்பாணம் கரவெட்டி சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலேயே அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
