யாழ் மயிலிட்டிக் கிராமத்து மக்கள் தமது மண்ணில் மீண்டும் தமது கால்களைப் பதிப்பதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம்-Crep
June 23, 2010 at 11:13 am · Posted Public Articles
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வலிவடக்கு, மயிலிட்டியிலிருந்து இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வசித்துவரும் இக்கிராமமக்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். அம்மக்கள் தமது தாய்மண்ணில் மீண்டும் கால்பதிப்பதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. எதிர்வரும் ஆனி மாதம் 25ம் திகதி பௌர்ணமி தினத்தன்று மயிலைவாழ் கண்ணகாதேவியின் தீர்த்த திருவிழா உற்சவ தினத்தன்று அம்பாளின் தேவஸ்தானத்திற்கும் முருகமூர்த்தி ஆலயத்திற்கும் பக்தஅடியார்கள் சென்று பூசைவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர். எனவே இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அம்பாளை சென்று தரிசிப்பதோடு முருகனை வணங்கி அவனருளையும் பெற்றுய்வதோடு தமது தாய்மண்ணை தரிசித்து வரும் பாக்கியத்தை மயிலையூர் மக்கள் பெற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அன்றைய தினம் தெல்லிப்பழையிலிருந்தும் பருத்தித்துறையிலிருந்தும் அரசபேருந்துகள் மயிலிட்டிக்கிராமத்திற்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு அடியார்கள் சைக்கிள் தவிர்ந்த ஏனைய தனிப்பட்ட வாகனங்களிலும் செல்ல அனுமதிக்கப்படுவர். அன்று இவ்வாலயங்களில் பிராயச்சித்த அபிடேக ஆராதனைகளுடன் அன்னதானமும் நடைபெறும் என ஆலய நிர்வாகிகள் அறியத்தருகின்றனர்.
