| கேத்ரீன் புதிய பட்டுச்சட்டையுடன் தட்டு முழுக்க இனிப்புகளை நிரப்பி, போதகர் பிரான்சிஸிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பெற வெகு காலையிலேயே வந்தபோது ஜேம்ஸ் தனக்கெடுத்த உடைகளை அணியாமல் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு தன் அம்மாவுடன் மாமா பிரான்சிஸுசுக்குக் கேட்காதவாறு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். பின் வாசலில் உருவமொன்று தன்னைக் கண்டதும் ஏன் பதுங்குகிறதென எண்ணி கேத்ரீன் ஒரு கணம் தயங்கி நின்றாள். அது ஆபிரகாம் போலல்லவா இருந்தது? அப்பாகூட நேற்றிலிருந்து ஆபிரகாம் வந்து விட்டானா, வந்துவிட்டானா எனக் குரலில் ஒருவிதப் பரபரப்புடன் வாசலுக்கும் தெருவிற்கும் பார்வையை ஓட்டியபடியே தன் அத்தையிடம் ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருந்தாரே? இல்லை. அவனாக இருக்காது. ஜேம்ஸின் உறவுக்காரனாக இருக்கக்கூடும் என கேத்ரீன் நினைத்துக்கொண்டிருந்த போதே பிரான்சிஸ் அவளருகில் வந்து சிலுவைக் குறியிட்டுப் “பரிசுத்தமானவர்களை ஆண்டவர் தன் பிள்ளைகளைப் போல எண்ணுவார்” என்றார். அவள் அவரை வணங்கி எழுந்து அவரது பிரியமான கண்களை நோக்கி “அவரிடம் என்ன வேண்டிக்கொள்வது” எனப் பெரியவள் போல் கேட்டாள். அவர் அவளைச் செல்லமாக அணைத்து “நீ வேண்டுவதை அவர் அறிந்திருக்கிறார்” என விவிலிய வசனமொன்றைச் சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டார். வயிற்றுவலி அவரைப் படுத்திக்கொண்டிருந்ததை அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. அதனாலேயே இவ்வருடம் கிறிஸ்துமஸ் இரவைத் தங்கை வீட்டில் கழிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டாகியிருந்தது. ஃபாதர் கூறியது பற்றித் தன் அத்தையிடம் கேட்டால் விளக்கிச் சொல்வாள் என நினைத்தவாறே, தன் அம்மாவின் உடல் நலம் பற்றி விசாரித்த ஃபாதர் ஏன் அப்பா மேத்யூ பற்றி எதுவுமே கேட்கவில்லை என மனத்தில் எழுந்த கேள்வியை மறைத்து அவரைப் பார்த்துச் சிரித்தாள். ஜேம்ஸைக் கண்களால் துழாவி சலித்து ஏதோ நினைவு வந்தவளாக பிரான்சிஸ் கேட்காமலேயே கைகாட்டியபடி, ஆர்வம் பொங்க அவளது குரல் வீடெங்கும் எதிரொலிக்கப் பாடத் தொடங்கினாள். பாடும்போது கைகட்டிக்கொள்ள வேண்டாமெனப் பலமுறை அவர் கூறியிருந்தும் கேத்ரீனால் அப்பழக்கத்தை விடமுடியவில்லை. குழந்தை யேசு மண்ணிற்கு வந்த மகிமையையும் அவர் செய்த அற்புதங்களையும் பற்றிய அப்பாடலைக் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த ஜேம்ஸ் மிகச் சரியான கணத்தில் அவளுடன் இணைந்து பாடி அதை முடித்துவைத்தான். பிரான்சிஸ் வியப்பு அகலாத கண்களுடன் அவனைப் பார்த்த பின் கேத்ரீனை நோக்கித் திருப்தியின் அடையாளமாகத் தலையசைத்தார். தன் பட்டுச் சட்டையை அவனிடம் காட்டிவிட்ட திருப்தியில் அருகில் நின்ற அவன் அம்மாவிடம் தட்டை எடுத்துத் தந்துவிட்டு வெட்கிச் சிரித்தபடியே வெளியே ஓடினாள்.ஜேம்ஸைப் பற்றி பிரான்சிஸுக்குப் பெரும் நம்பிக்கையிருந்தது. அவன் தேர்ந்த பாடகனாகவோ இசையில் விற்பன்னனாகவோ ஆகக் கூடுமென்றும் அதற்குத் தன்னாலான அனைத்தையும் செய்ய வேண்டுமென்றும் எண்ணியிருந்தார். அவன் இசை கற்கத் தொடங்கிய ஆரம்ப நாளிலிருந்தே அதற்குரிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தியபடியிருந்தான். அந்தத் திருச்சபையின் போதகராகவும் இசை கற்பிக்கும் ஆசிரியராகவும் பிரான்சிஸ் இருந்தார். இசை ஒரு கணக்கு என்பதை உள்ளூர ஒப்புக்கொள்ள அவர் மறுத்தார். கணக்குகள் விடைகளை அடைந்ததும் தன்னை முடித்துக்கொள்கின்றன. மேலும் அவை சூத்திரங்களில் கட்டுண்டு கிடக்கின்றன. ஆத்மாவை உலுக்கி அது அன்றாடம் புரளும் கலங்கிய சேற்றிலிருந்து மீட்டு உன்னதங்களின் ஒளிக்கு அழைத்துச்செல்லும் அசாத்தியமான வடிவம் இசையென பிரான்சிஸின் அப்பா அவருக்குக் கூறியிருந்திருக்கிறார். அப்பா வில்சன் தன்னிடம் கூறிய அவ்வேளையைப் பிரான்சிஸ் மனம் விம்மித் தணிய வெகு துல்லியத்துடன் நினைவுகூர்ந்தார். வில்சன் தேவனின் பாடல்களை வடிவமைப்பதையும் திருநாளின் போது அதை இசைப்பதையுமே பிறவிக் கடனாக எண்ணியிருந்தவர். அவர் வழியாகத் தனக்கு வந்து சேர்ந்த இந்த இசையறிவும் ஆண்டவருக்கே உரியது என பிரான்சிஸ் கருதியிருந்தார். வில்சன் அந்தத் தேவாலயத்தின் சுற்றுச் சுவர்களுக்குள் இருக்கும் புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் இருந்தார். அங்குப் பயிலும் மாணவர்களில் பலரும் பிற பாடங்களில் மதிப்பெண் குறைந்து மொத்தச் சராசரியின் விகிதம் வீழ்ச்சியடைகையில் அவர் எடுக்கும் கணிதத்தின் மூலமாகவே அதைத் தூக்கி நிறுத்திக்கொள்வார்கள். அவர் இறந்து சில வருடங்களுக்குப் பின் அவரது நாட்குறிப்பைத் தற்செயலாக பிரான்சிஸ் காண நேர்ந்தபோது அதில் சொற்களுக்குப் பதில் இசைக் குறிப்புகளே நிரம்பியிருந்ததைக் கண்டார். தந்தையின் நினைவிற்குள் சென்ற பிரான்சிஸ் அவரையுமறியாமல் முட்டிக் கசிந்த கண்ணீருடன் நடுக்கூடத்தில் நின்றார்.
2
அம்மாவின் அண்மைக்கு ஏங்கிய வில்சன் அதனாலேயே அப்பாவின் கடுங்கோபத்திற்குள்ளான பிள்ளை. தன் அப்பா ஹென்றியைச் சாத்தானின் தூதுவனாக வில்சன் நினைத்தார். மிக அபூர்வமாக ஹென்றி, பாடத்தில் கேள்வி கேட்கும்போது அவர் முகத்தை நெருக்கமாகக் கண்டு அதை உறுதிப்படுத்தியிருந்தார். அவரது “ம் . . . ம்” என்ற அதட்டலிலேயே அவரது அரைநிஜார் நனைந்து தரை ஈரமாகிவிடும். ஹென்றியின் அண்ணன் பாதிரியாகி கிறிஸ்துவத்தைப் பரப்ப தேசம் முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்ததால் ஹென்றி பரம்பரையாக வந்துசேர்ந்த சொத்துகளை இராஜ்யம் செய்துகொண்டிருந்தார். பாட்டியின் அரவணைப்பு ஒன்றுதான் வில்சனை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. வராண்டாவில் அமர்ந்து மாலைவேளைகளில் பைப் பிடித்தபடியே மதுக் குப்பிகளை ஹென்றி காலி செய்கையில் இன்னும் தன் பெயரில் மிச்சமிருக்கும் சொத்துகளைக் கண்ணை மறைக்கும் புகையின் நடுவே கணக்கிட்டு மகிழ்ந்து மேலும் சில குப்பிகளை உற்சாகத்துடன் உள்ளே தள்ளுவார். அந்தச் சமயத்தில்தான் வில்சன் பாட்டியின் அனுமதியோடு இசை வகுப்புகளுக்குச் சென்றுவந்தார். வில்சனை ஏதோவொன்றில் திருப்பிவிட்டால் அன்னை இல்லாத அந்தத் தனிமையிலிருந்து விடுபட்டுவிடுவான் என்னும் பாட்டியின் எண்ணம் பொய்த்துப்போகவில்லை. முதல் சில வகுப்புகளிலேயே அவரது உள்வாங்கும் ஆற்றல் கண்டு ஜான்சன் மாஸ்டரின் விழிகள் விரிந்து இமைகள் மேலேறிற்று. தேவாலயத்தில் ஜான்சன் மாஸ்டரால் இசைக்கப்படும் பாடல்களால் வில்சன் சிறுவயதிலேயே பிரதான பாடகனாக உருவாகியிருந்தான். பாடல் வரிகளின் மேடுபள்ளங்களுக்குள்ளும் இசையின் வளைவு நெளிவுகளுக்குள்ளும் அவரது குரல் வெகு சாதாரணமாகப் புகுந்து வெளியேறிற்று. வில்சனின் குரலில் நுட்பமான மாற்றங்களை ஜான்சன் மாஸ்டர் உருவாக்கியிருந்தார். அப்போதுதான் குரல் உடைந்திருந்தது. திருச்சபையால் எல்லைகள் வகுக்கப்பட்ட அந்த மரபான இசையை மீறிச் செல்லத் துடிக்கும் அந்த இளம்பாடகனை அங்குக் குழுமியிருந்தவர்கள் வியந்து அவ்வியப்பு தீரும் முன்னே ஆச்சரியத்துடன் கைகுலுக்கித் தனியே அழைத்து விசாரிக்கையில் அவர்களிடம் கண்களில் வெட்கம் தேங்கி நிற்கப் பேசும் பேரனை, அவருடைய பாட்டியும் தன் பிரியத்திற்குரிய மாணவனை ஜான்சன் மாஸ்டரும் பெருமையுடன் பார்த்து நின்றனர். சில தினங்கள் கழித்து வகுப்பு முடிந்து வாடிய முகத்துடன் தலையசைத்துச் சென்ற வில்சன் எங்கோ தவறி விழுந்து மோசமான அடியுடன் படுக்கையில் கதறியபடி கிடந்த செய்தி மாஸ்டருக்கு எட்டியது.
வில்சனின் உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படி தேறாமல் மருத்துவர்களும் சங்கடத்தோடு கைவிட்ட நிலையிலும் ஜான்சன் மாஸ்டர் மட்டும் அவனை நாள்தோறும் கண்டு வெகுநேரம் அமர்ந்து ஆத்ம நண்பனைப் போல அன்னியோன்யமாகப் பேசிச் சென்றார். அப்போது அவர் கூறிய எளிய சொற்களால் வில்சனின் மனத்தில் நம்பிக்கையின் விதைகள் விழுந்து முளைவிட்டு வளரத் தொடங்கிற்று. அச்சொற்களை வில்சன் பின்னாளில் எண்ணிக்கொண்டபோது, தான் மீண்டெழ மறைமுகமான ஊக்கியாக அவை இருந்ததையும் அசாதாரணமான விஷயங்கள் பல தருணங்களில் எளிய தோற்றங்களையே கொண்டிருக்கும் என்ற உண்மையையும் அவர் உணர்ந்தார். பலரும் ஆச்சரியப்படும் வகையில் வில்சன் தேறிவந்தபோது அவரது பாட்டி வேண்டிக்கொண்டபடி அந்தச் சிலுவை தேவாலயத்திற்கு அளிக்கப்பட்டு வில்சன் புத்துணர்வோடு நின்று ஜான்சன் மாஸ்டருக்கு மிகப் பிடித்த பாடலொன்றைப் பாடியபோது அவர் கண்ணீர் வழிய தலை கவிழ்ந்து நின்றார்.
3
ஃபாதர் பிரான்சிஸ் திருச்சபையால் தனக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கும் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வருகையில் அவருக்கு முன் மேத்யூ கைகூப்பி நிற்பதைக் கண்டார். மேத்யூ ஒரே ஒரு தகவலை மட்டும் அவரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டுமென்ற பரபரப்புடன் இருந்தார். ஒரு கணம் தயங்கிப் பின் மேத்யூவை அழைத்துச் சென்றார். பிரான்சிஸிடம் ஏற்பட்ட அந்தக் கணநேர முகச்சுருக்கத்தைக் கண்டு மேத்யூ தலையசைத்து “இவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை” எனக் கூறிக்கொண்டார். வெவ்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசியபடியே இருந்த மேத்யூ வந்த நோக்கம் பற்றிக் கேட்க உள்ளூர அச்சம் கொண்டிருந்தார். அவரால் பிரான்சிஸின் அலைபாயாத கண்களை நேருக்கு நேராகப் பார்க்கவே முடியவில்லை. பின்னர் மெதுவாக ஆபிரகாம் கூறியது போலவே ஒப்புவிக்கத் தொடங்கினார். அன்று திருமணத்திற்கு வந்தபோதுதான் சர்ச்சைக் கண்டதாகவும் அது மிகப் பழைய தோற்றம் கொண்டு விட்டதாகவும் வருத்தத்துடன் சொன்னார். எனவே தேவாலயம் முழுக்க வண்ணமடிக்க வேண்டுமென்றும் அந்தளவிற்கு அது சோபை இழந்துவிட்டதாகவும் பிரான்சிஸிடம் கூறிய மேத்யூ, செலவில் மூன்றில் ஒரு பங்கு என்னுடையது என்றார்.
பிரான்சிஸ் நிதானத்துடன் மேத்யூவை நோக்கி, “இது கமிட்டி முடிவுசெய்ய வேண்டியதாயிற்றே” என்றார்.
மேத்யூ சற்றுநேரம் எதுவும் பேசாமல் நின்று கோபத்தை அடக்கி அது தணிந்த பின் “அதற்கென்ன? கர்த்தருக்குச் செய்வதை யார் தடுக்கப் போகிறார்கள்?” என அச்சுறுத்தும் தொனியில் கூறி, அவரைவிட்டு விலகிச் சென்றார். சோர்வான முகத்துடன் மேத்யூ தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தபோது ஆபிரகாம் துள்ளலான நடையில் வந்து அத்தகவலை செகஸ்டனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட்டதாகவும் அது பூட்டில்லாத கண்ணாடிப் பேழைதான் என்றும் தங்கத்தின் மேல் தூசிபடியாதிருக்க செய்த ஏற்பாடுதான் அது என்றும் சொன்னான். அடுத்துக் கேட்க வாய்திறக்கும் முன் அவனது திட்டம் பற்றி விரிவாக அவரிடம் கூறினான். பிரான்சிஸிடம் பேசியபோது மனத்தில் ஏற்பட்ட அவநம்பிக்கை விலகி அச்சிலுவை தன் கையில் வந்துவிட்டது போல மேத்யூ உள்ளே துள்ளினார்.
4
கேத்ரீனின் அப்பாவுக்கு அவள் பாட்டுப் பயிற்சிக்குச் செல்வது சற்றும் பிடித்திருக்கவில்லை. தங்கத்தால் சட்டமிடப்பட்ட கண்ணாடிச் சில்லு வழியாக அவர் தன்னை உற்று நோக்குவதை அவள் அறிவாள். அரசாங்க காண்ட்ராக்ட் கோப்புகள் அனைத்திலும் மேத்யூவின் பெயர் தவிர்க்க முடியாததாகயிருந்தது. அவரது ஆட்கள் ஏலத்தொகை கூறிய பின் ஒருவனும் வாய்திறக்கத் துணிய மாட்டான். அவர் பழைய அம்பாஸிடரில் வந்து, தங்க நிறப் பேனாவில் கையெழுத்திட்டுவிட்டு அனைவரையும் வணங்கிய பின் மறைந்துபோவார். அவர் சேர்த்திருந்த சொத்து பற்றி அந்த ஊர் தேநீர்க் கடைகளில் பீடிகளை ஊதித் தள்ளியபடி பெருமூச்சோடும் வயிற்றெரிச்சலோடுமாகப் பலரும் புலம்பிக் கலைவது அவருக்குத் தெரியும். கேத்ரீன் தன்னிடம் நாட்டமில்லாமல் எப்போதும் விவிலியத்தோடு திரியும் தன் அக்காவிடம் நாட்டம்கொண்டிருந்தது குறித்த கடுங்கோபம் அவருக்குண்டு. மணமான சில வருடங்களிலேயே கணவனை இழந்துவிட்டிருந்த அவள் “எளிமையானவர்களிடம் ஆண்டவர் எப்போதும் வரத் தயங்குவதில்லை எனக் கேத்ரீனுக்குச் சொல்லித் தந்திருந்தாள். “நானு பட்டினியில வயிறு சுருங்கிக் கிடைக்கையில எந்தத் தேவனும் என்னயக் காப்பத்தல” என மேத்யூ அக்காவிடம் சத்தமிட்டுக் கோபத்துடன் கத்தியிருக்கிறான். ஆனாலும் அவர் அக்கா, யேசுவிடம் கொண்டிருந்த களங்கமற்ற நேசத்தை ஒரு நாளும் கேலி பேசியவரல்ல. அந்தத் திருச்சபையின் எல்லா மட்டங்களிலும் அவருக்குச் செல்வாக்கிருந்தது. தேவாலயத்திற்குள் செய்து முடிக்கப்பட்ட பணிகளில் மேத்யூவின் பங்கு பிரதானமானது. அவருக்குச் சர்ச்சின் முக்கிய விசேஷங்களுக்குத் தவறாமல் வீடு தேடி அழைப்பு வரும். ஆனால் அங்கே செல்வதை முடியும்மட்டும் தவிர்த்துவிடுவது அவருடைய வழக்கம்.
மேத்யூ சர்ச்சுக்கு வந்தே தீரவேண்டிய கட்டாயம் அவருக்கு உருவாயிற்று. அவரது சமவயதுத் தோழனும் ஊரில் அவருக்கு நிகரான செல்வந்தனுமான டேவிஸ் ஜஸ்டினின் மகளது திருமணம் ஃபாதரின் ஆசீர்வாதங்களுடன் நடந்து முடிந்ததும் மேத்யூ உள்ளே நுழைந்து டேவிஸை மூச்சுமுட்டும் அளவு கட்டிப்பிடித்து இரு கைவிரல்களையும் அவருடைய விரல்களோடு கோத்துக்கொண்டு “ராஸ்கல்… ராஸ்கல்” எனச் செல்லமாக அதட்டினார். டேவிஸின் உடையிலிருந்த திரவியத்தின் மணம் அவரைத் திணறடித்துப் பொறாமையைத் தூண்டிற்று. பேண்ட் வாத்தியங்கள் முழங்க மேத்யூ வாங்கித் தந்திருந்த மரப்பெஞ்சுகளின் இடைப்பட்ட பாதையில் சிவப்புக் கம்பளத்தில் மணமக்களை அழைத்துச் சென்றபோது அகஸ்மாத்தமாக மேத்யூவின் கண்கள் தேவாலயத்தைச் சுற்றிவந்து ஒரு புள்ளியில் நின்று சகஜமாகிப் பின் மீண்டும் அப்புள்ளியை நோக்கியே சென்ற தன் மனம் மீண்டும் மீண்டும் அங்குக் குவிவதை அவர் பயத்துடன் மறைக்க முயன்றார். அங்கே தங்கத்தாலான சிலுவையொன்று கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பார்வையை அறிந்து, அந்தச் சிலுவை பெரும் மதிப்பு வாய்ந்ததென்றும் அது தேவாலயத்திற்குள் வைக்கப்பட்ட அன்று கலந்துகொண்ட சிறுவர் சிறுமியரில் வெகுசிலரே உயிருடன் இருக்கிறார்களென்றும் அவ்வளவு பழமையும் பெருமையும் உடையது என்றும் டேவிஸ் மேத்யூவிடம் கூறினார். அதற்கு மேலே முட்கிரீடம் சுமந்து ஆணியால் அறையப்பட்ட தேவகுமாரன் துக்கம் உறைந்த முகத்தோடு கைவிரித்து நிற்பதையும் டேவிஸ்தான் புன்னகையுடன் மேத்யூவிற்குக் காட்டித் தந்தார். அம்முகத்தைக் காண முடியாமல் உடனடியாகப் பதற்றத்துடன் அங்கிருந்து பார்வையை மேத்யூ விலக்கினார்.
5
அன்று கூறமுடியாத மன எழுச்சியில் வில்சன் இருந்தான். அதற்கு முன்தினம் மிக நுட்பமான இடமொன்றை நோக்கிச் செல்ல முடியாமல் நடுவில் தத்தளித்து, கோட்டைவிட்ட சோர்வில் எதுவும் உண்ணாமலேயே படுத்திருந்தான். இரவு முழுக்க அதுதான் மனத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது. மறுநாள் காலையில் அதைப் பிடித்துவிட்ட உடனே ஜான்சன் மாஸ்டரைக் கண்டு, அவரிடம் பாடிக்காட்ட வேண்டுமென்ற பேராவல் அவனுள் எழுந்தது. வெளியே வந்ததும் அங்கே சாவதானமாக அசைபோட்டு நின்றிருந்த குதிரை அவன் கண்ணில் பட்டது. அப்பா ஹென்றி எங்கோ சென்றிருந்ததால் வில்சன் மேலும் பயமின்றி அதை நெருங்கினான். எப்போதும் போல அவனுக்குப் பணிய அது மறுத்தது. அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கால்மாற்றி உடலில் அலட்சியம் வழிய நின்று அதிருப்தியுடன் மெல்லக் கனைத்தது. அவன் விடாப்பிடியாக இழுத்துவந்து அதன் மீதேறிச் சென்றான். மாஸ்டரைக் காணும் ஆவலில் அவனையுமறியாமல் தன் காலால் அதன் விலாவில் பலமாக இடித்துவிட்டான். அது திமிறிப் பறக்கத் தொடங்கிற்று. அவன் சவாரியில் அரைகுறையாகத் தேறியவன் என்பதால் லகானைச் சுருட்டிப் பிடித்து இழுக்க அதைக் கொத்தாகப் பற்றும் இடைவெளியில் அது ஒரு வளைவை அபாயகரமான வேகத்துடன் திரும்பிற்று. வில்சன் வெகுதூரம் தூக்கியெறியப்பட்டு விழுந்தான். தலையை மேலே தூக்கி எழ முயன்று அப்படியே சரிந்தான். அவன் கண்களின் முன்னால் பூச்சிகள் பறப்பது போலத் தோன்றிற்று. கண்களை வலியுடன் மூடியதும் கண்ணீர் சலேரெனக் காதுக்குள் இறங்கிற்று.
வில்சனைச் சோதித்த மருத்துவர்கள் மேல்நோக்கிக் கைகாட்டிவிட்டு மௌனமான தலையசைப்புடன் வெளியேறினர். அவர்களுடன் மல்லுக்கு நின்ற பாட்டியிடம் வில்சனின் இடுப்பிலிருந்து பிசின் போன்ற திரவம் நிற்காமல் சொட்டிக்கொண்டிருப்பதைக் காட்டிவிட்டு ஆறுதலுக்காகத் துணியைச் சுற்றிவிட்டுச் சென்றனர். பாட்டி கண்ணீர் வற்றாத முகத்துடன் தேவாலயத்திற்குச் சென்று முழந்தாளிட்டு ஜெபித்தாள். அவன் நலம் பெற்றுத் திரும்பினால் தேவாலயத்திற்குத் தங்கச் சிலுவையொன்றைச் செய்து அளிப்பதாக மனத்திற்குள் கூறிய பின் சிலுவைக் குறியிட்டுவிட்டு வீடு சேர்ந்து ஜெபமாலையை உருட்டியபடியே ஓயாமல் பிரார்த்தித்து “அவனை சொஸ்தப்படுத்தி ஆசிர்வதியும் எம் தேவனே” எனக் கூறியபடியே இருந்தாள்.
6
மேத்யூ, டேவிஸிடம் வெகுநேரம் பழைய நாட்களைப் பற்றிப் பேசிவிட்டு திரும்பிச் செல்கையில் இறக்கிவிடப்பட்ட கார்க்கண்ணாடியின் வழியாக சிகரெட் புகையை மெல்ல விட்டுத் தன் கையாட்கள் ஆபிரகாமையும் தர்மனையும் மாறிமாறிப் பார்த்து “எரும நாய்களா” எனத் திட்டி, திரண்டுவந்த கோழையை வெளியே துப்பினார். கோபத்துடன் உதட்டைக் கடித்து எரிச்சலடைந்த முகத்துடன் திரும்பி “அந்தச் சிலுவைய ஒரு மயிராண்டியும் பாக்கல்ல இல்ல?” எனக் கத்தினார். அவருக்குக் கோபம் வரும் போதெல்லாம் வசவும் வந்து ஒட்டிக்கொண்டுவிடும். எந்த ஏலம் கைதூக்கிவிடும் எது தன்னைக் கீழே தள்ளும் என்பதை நிமிடங்களுக்குள் கணக்கிட்டுக் கூறும் தீர்க்கதரிசி ஆபிரகாம். அவன் அறிந்திருக்கக்கூடும். அவனருகில் தர்மன் விருந்துண்ட மயக்கத்தில் இருப்பதைக் கண்டார். தர்மன், அவிழ்த்து விட்டுவிட்டு ஜாடைகாட்டினால் எதையும் யோசிக்காமல் சென்று முட்டி எறிந்துவிட்டு வந்து முகத்தை நக்கும் மாடு போன்ற குணமுடையவன்.
மேத்யூ கோபம் தணிந்தவராக “ஆபிரகாம் அதப் பாத்தியா . . . பல லட்சம் போகுமாமே” என்றார் கண்கள் மின்ன. அவன் வேகமாகப் பின்னால் ஓடும் மரங்களை அடைக்கப்பட்ட கறுப்புக் கண்ணாடி வழியாகப் பார்த்தபடி வந்தான்.
“அது ஒண்ணும் வேணாம் சார்” என ஒற்றை விரலை மேலே தூக்கிக் காட்டி “ஆண்டவருக்கு விசுவாசியா இருந்து மரிச்சுப் போகணும் அது போதும். இந்த மாதிரி பாவத்துக்கு அந்தத் தேவன்கிட்ட மன்னிப்பேயில்ல சார்” என்றான். அவனுக்கு எல்லோருமே சார்தான்.
மேத்யூ தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் “உன்னோட பிரசங்கத்தக் கேட்கலடா நாயே! நீயும் உங்கப்பனாட்ட ஆயுசுக்கும் கூலி வேலை செஞ்சு சாக வேண்டியதுதான்டா! ராஸ் குழிப்பறிச்சதுல உம் பங்கும் இருக்கு மறந்திராத!” என இரைந்தார்.
அவரது பெரும்பாலான மோசடிகளுக்குப் பக்க பலமாக இருந்தது அவன்தான். அப்போது சில்லரைகளுக்காகவே ஏங்கியவனாக இருந்தான். கடவுள் அன்று அவன் நினைவிலேயேயில்லை. மேத்யூவிடம் சேர்ந்து பணம் வரத் தொடங்கி, திரேஸாவை மணந்துகொண்டதும் அவள் மூலமாக ஆபிரகாமுக்கும் கடவுளிடம் பயமும் பக்தியும் வந்து சேர்ந்துவிட்டிருந்தன. மேத்யூ கடவுள் பற்றி ஒரு நாளும் கவலைப்பட்டவரல்ல.
ஒன்றுக்கிருக்கக் காரை ஓரமாக நிறுத்திய சில நிமிடங்களுக்குள் மரத்தடியிலிருந்து திரும்பிவந்து கொண்டிருந்த ஆபிரகாமின் தோள்மேல் கைபோட்டு மேத்யூ தனியே கூட்டிச் சென்றார். அவன் காதில் ஏதோவொன்றைச் சொல்ல அவன் முகம் பெரும் வெளிச்சத்திற்கிடையே நிற்பது போல் பிரகாசமடைந்தது. அவன் வலு கூடின நடையுடன் பின்பக்கமாக ஏறி அமர்ந்ததும் மேத்யூ திருப்பி அவனை நண்பனைப் போலப் பார்த்தார். ஆபிரகாம் உதடு நடுங்க அவர் கையைப் பற்றினார்.
தன் மகள் பாக்கியம் தன் கைப்பற்றித் தெருவில் நடந்துவரும் சித்திரம் அவன் மனத்திற்குள் வந்ததும் பரவசத்தில் அவனுக்குக் கண்கள் நிறைந்தன. அதைப் புறங்கையால் துடைத்தபடியே “எம் பிதாவே” என மனமுருகப் பிரார்த்தித்தான். நாளை காலை ஆபிரகாம் வீட்டிற்கு உருப்பெற்ற திட்டத்தோடுதான் வருவான் என மேத்யூவிற்கு உறுதியாகத் தோன்றிற்று.
கூட்டத்தில் ஃபாதர் பிரான்சிஸ் வழக்கமான சில நடைமுறை விஷயங்களைப் பேசிய பின் மேத்யூ கூறியதைச் சொல்லத் தொடங்கியதும் அதை மற்றவர்கள் அறிந்திருந்ததற்கான சமிக்ஞைகளைக் கையசைத்தும் தலையாட்டியும் வெளிப்படுத்தினர். அதைச் செயல்படுத்த மேலும் இருவர் தேவையென பிரான்சிஸ் தொடர்ந்ததும், பெஞ்சமின் எழுந்து அதை மேத்யூ சரிகட்டிவிட்டாரென்றும் ஒருவர் டேவிஸ் ஜஸ்டின் மற்றொருவர் நமது பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் அலெக்ஸ் என்றும் தன்னிடம் நேற்று ஆபிரகாம் வழியில் மறித்துச் சொன்னான் என்றார். பிரான்சிஸ் உடனே “மேத்யூவைப் போன்றவர்கள் இப்பணியைச் செய்ய வேண்டுமா? என்றார். பெஞ்சமின் எழுந்து “அப்படியானால் நீரே ஏற்றுக்கொள்ளும்” என்றார். மற்றவர்கள் தன்னை முறைப்பதைக் கண்டு அரைமனத்தோடு பிரான்சிஸ் ஒப்புக்கொண்டார். அவரது சுண்டிய முகத்தைப் பார்த்து “காம்ப்பௌண்ட் சுவர் வாசகங்களை நீர்தான் தெரிவுசெய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார் மற்றொரு உறுப்பினரான ஸ்டீபன். அவன் எதுவும் கூறாமல் அக்கூட்டத்தை முடித்துச் சோர்வுடன் வெளியே வந்து கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கிறிஸ்துவைத் தன் கண்ணாடி வழியாக நோக்கி நின்றபோது “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்ற வேதாகம வசனம் அவர் மனத்தில் வந்து நின்றது.
ஆட்களை ஆபிரகாம் எங்கிருந்தோ கூட்டி வந்தான். அதில் வண்ணம் அடிக்கவே தெரியாத இருவரை அவன் கலந்துவிட்டிருந்தான். அலெக்ஸ் ஆபிரகாமைத் தன் அறைக்கு வரச்சொல்லி, “கோபுரத்தையும் அங்குச் சிலுவையிலிருக்கும் யேசுவையும் கிறிஸ்துவானவனைத் தவிரப் பிறர் தொடக் கூடாது” என மாணவனை எச்சரிப்பது போன்ற தொனியுடன் கூறினார். மேத்யூ எப்போதேனும் வந்து கண்களால் அவனுடன் பேசிச் சென்றார். அடிக்கடி அவர் வர வேண்டாம் என ஆபிரகாம் சொல்லியனுப்பினான்.
ஆபிரகாம் ஏறக்குறைய அந்தத் தேவாலயத்திலேயே கிடந்தான். கிறிஸ்துவைத் தொழுவது போல அடிக்கடி ஆல்டரின் முன் நின்று அந்தச் சிலுவையை மனத்தில் ஆழமாகப் பதியவைக்க முயன்றுகொண்டிருந்தான். அந்தத் திருச்சபையின் ஊழியர்கள் அதற்குள் அவனுக்கு நன்கு பழக்கமாகிவிட்டிருந்ததால் அதைப் பக்தியின் வெளிப்பாடு என எண்ணி நகர்ந்தார்கள். எப்போதும் அனைத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் செலவுக்குரிய பில்களைப் பரிசோதிக்கும் அலெக்ஸ் சார்தான் அவனுக்கிருந்த ஒரே தலைவலி. அவர் உள்ளே வரும்போதே அவன் வேறுவழியாக வெளியேறிவிடுவான்.
ஆபிரகாம் கண்களால் அளவெடுத்து தர்மனிடம் அதைக் குறித்துத் தந்து வெகுதொலைவு சென்று தங்கத்தால் மெருகிடப்பட்ட பித்தளையில், பிறருக்கு அது போலி எனத் தெரியாதவாறு, அதே போன்ற சிலுவையைச் செய்து வர அனுப்பினான். அது அதிகம் மின்னக் கூடாது என அழுத்திக் கூறியிருந்தான் பிறந்ததிலிருந்தே கை கால்கள் செயலிழந்து துவண்டு படுக்கையில் கிடக்கும் தன் மகள் பாக்கியத்தை அப்போது ஆபிரகாம் நினைத்துக்கொண்டான். தன்னைக் கண்டதும் எழ முயன்று “ஈய்ய்… உய்…ய்” எனச் சத்தமிட்டு வாயிலிருந்து நீர் வழிய சிரிக்கும் மகளின் ஞாபகம் எழுந்தது. அவன் கண்கள் நிறைந்து மனம் நடுங்குவதை உணர்ந்தான். அவனும் திரேஸாவும் பாக்கியத்தை மாற்றி மாற்றித் தோளில் போட்டுக்கொண்டு அலைந்த அலைச்சல் கேட்பவர்களின் மனத்தை உறையச் செய்துவிடும். பாக்கியம் அவனைப் போலவே நல்ல உயரம். அவளைத் தோளில்போட்டதும் அவளது துவண்ட கால்கள் அவர்களின் முழங்கால்களிடையே மோதி, நடக்க முடியாமல் நடந்து மருத்துவமனைகளுக்குச் சென்று தோற்றுத் திரும்பிய அனுபவங்கள் ஏராளம் அவர்களுக்கு உண்டு. அப்பயணத்தில் பாக்கியத்தைக் காண்பவர்கள் செயற்கையான கருணையைக் கண்களில் காட்டித் தங்கள் குழந்தைகளை இறுக அணைத்துக்கொள்வார்கள். திரேஸா பாக்கியத்தின் வாயில் வழியும் நீரைத் துடைத்து விட்டபடியே மௌனமாக அழுவாள். மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து அதன் முன் முழந்தாளிட்டு அமர்ந்து கண்ணீர் வழிய வெகுநேரம் திரேஸா பிரார்த்தனை செய்கையில் அவள் முகம் நேரம் செல்லச் செல்ல, மேலும் கனிவு கொண்டதாக மாறிய படியேயிருக்கும். அதிலிருந்து எழுந்து உதடுகள் ஜெபித்தபடியிருக்க பாக்கியத்தின் கைகால்களை நீவிவிடுவாள். “உம் பிள்ளைகளின் மீது கருணை காட்டும் எம் ஆண்டவரே!” எனப் பாக்கியத்தைத் தன் மடியின் மீது போட்டுக்கொள்வாள். தட்டில் பிசைந்த சோற்றுடன் அவளை ஆபிரகாம் நெருங்கிச் சென்று அமர்வான். அவள் பருவமெய்தும் வயதை எட்டச் சில மாதங்களே பாக்கி இருப்பதாக திரேஸா கணக்கிட்டு அவனிடம் கூறியபோது கேட்காதவன் போல அசைவற்றுக் கூரையை வெறித்தபடி படுத்திருந்தான். இத்திட்டம் கைகூடிவிட்டால் அந்த மருத்துவச் செலவு முழுவதும் தான் ஏற்பதாக மேத்யூ அவர் அம்மாவின் பேரில் ஆணையிட்டுக் கூறியிருந்ததனாலேயே ஆபிரகாம் இதை ஒப்புக்கொண்டான். அவன் மனம் அதிலேயே சுழன்றபடியிருந்தது. அவன் நின்றுகொண்டிருந்த வராண்டா வாசலில் வெளிச்சம் வந்தது கண்டு நிமிர்ந்து அங்கு செகஸ்டன் சிரித்தபடி நிற்பதை அறிந்து அதிலிருந்து மீண்டு அவனைக் கூட்டிக்கொண்டு வெளியே புகைக்கச் சென்றான்.
ஆபிரகாம் இரண்டு நாட்களாகப் பயந்துபோய்க் காய்ச்சலில் பிதற்றியவாறிருந்தான். அப்போது அவன் மனம் முடுக்கிவிடப்பட்ட யந்திரம் போல இரைச்சலிட்ட படியே இருந்தது. அவற்றின் அலையடங்கி உறங்கும் வேளையில் அவன் கனவுகளில் கண்ட காட்சிகளால் உலுக்கப்பட்டு எழுந்தமர்ந்து இருண்ட வீட்டை நோக்கியபோது திரேஸாவின் மெல்லிய குறட்டையொலி கேட்டது. அவனது மகன் அவள் மேல் ஒற்றைக் காலைப் போட்டுப் படுத்திருந்தான். பாக்கியம் போர்வையின் மேல் படுத்துக்கிடக்க அவளைச் சுற்றிலும் கொசுக்கள் பறப்பது ஜன்னலின் வழி விழுந்திருந்த வெளிச்சத்தில் தெரிந்தது. ஆபிரகாம் பாக்கியத்தை எண்ணியபடியே தன் சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
சர்ச்சில் ஏகதேசமாக அனைத்துப் பணிகளும் முடிவை எட்டிக்கொண்டிருந்தன. தர்மனோ மேத்யூவோ அங்கில்லை என்பதை உறுதிசெய்து தர்மன் செய்து வந்திருந்த சிலுவையை எடுத்துப் பார்த்து உள்ளே வைத்தான். பள்ளிவிடும் நான்கு மணியைக் குறித்து வைத்திருந்தான். அப்போது எழும் இரைச்சலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென முடிவு செய்திருந்தான். அவன் கூட்டி வந்திருந்த இருவரிடமும் அவன் ஜாடைகாட்டியதும் அவர்கள் அடித்துக்கொண்டு சண்டையிடத் தொடங்கினர். கட்டிப்புரண்டு ஒருவன் மேல் ஒருவன் ஏறிப் பலமாக அடிகள் விழாதவாறு ஆனால் பார்ப்பவர்களுக்கு அது கைகலப்பு எனத் தோன்றும்படி குத்துகளைக் காற்றில் விரயமாக்கிக் கொண்டிருந்தனர். எல்லா வேலையாட்களும் சாரத்திலிருந்து இறங்கிவந்து அவர்களை விலக்கப் பெரிதாக முயன்றனர். அவர்களைப் பிரிக்க வந்தவர்களில் ஒருவனை அவ்விருவரும் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். அப்புதியவன் அவர்களை ஆடு போல, தலையில் முட்டிக் கீழே தள்ளினான். அங்கிருந்து எப்போதோ நழுவி ஆபிரகாம் சர்ச்சுக்குள் வந்துவிட்டிருந்தான். உள்ளே ஈக்கள்கூட இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது. சண்டை நடக்கும் இடத்திற்கு ஆட்கள் சென்றிருக்கக் கூடும். கணப்பொழுதில் அவன் அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து சிலுவையை மாற்றி, வேகமாக உள்ளே அடிக்கும் மனத்துடிப்பு சமநிலைக்கு வந்தபின் ஆல்டரின் முன் முழந்தாளிட்டு மானசீகமாக மன்னிப்புக் கோரி மூன்றுமுறை வணங்கி எழுந்தான். அந்தச் சிலுவையின் கனம் அவன் நினைத்துப் பார்த்திராத அளவிற்கு இருந்தது. நிதானமாக அவன் வெளியே வந்தபோது அச்சண்டையை அலெக்ஸ் சார் முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார். அம்மூவரும் உடலெங்கும் மணல் அப்பி நின்றிருந்தனர்.
அலெக்ஸ் “எங்கடா போய்த் தொலஞ்ச” எனக் கத்தினார். அவரின் புறங்கையில் சாக்பீஸ்களின் வெள்ளை படிந்திருந்தது.
அவன் நிதானமாக, “பெயிண்ட் வாங்கறதுக்குப் போனங்க சார். அதுக்குள்ள இப்படி நடந்திருக்கு” எனத் தன் கையிலிருந்த புதிய பிளாஸ்டிக் பக்கெட்டை ஆபிரகாம் அவரிடம் காட்டினான்.
பைகள் தோளில் கனக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பையன்கள் அவரது ஒரு பார்வையிலேயே அவ்விடத்தைவிட்டு அகன்று மறைந்தனர்.
“இவங்க இரண்டு பேரு கணக்கையும் முடிச்சு அனுப்பு. வேலை செய்ய வந்தானுகளா? இல்ல குஸ்தி போட வந்தானுகளா” எனப் பொரிந்து தள்ளினார். ஆபிரகாம் மௌனமாகத் தலையாட்டினான். அப்போது இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் என்பதை அலெக்ஸ் அவனுக்கு நினைவூட்டிச் சென்றார்.
7
தேவாலயத்தைச் சுற்றிலும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் பலூன் கடைகளைக் கண்டு அம்மாவின் முந்தானையைப் பற்றி இழுத்து அடம்பிடித்து வாங்கிக் கைகளில் பிடித்தபடி செல்கின்றனர். குடைராட்டினங்களில் ஏற வரிசைகள் நீண்டிருக்கின்றன. பெரியவர்கள், விற்பனைக்கிருந்த கிறிஸ்துவின் அன்னையின் படங்களையும் விவிலிய வாசகங்கள் பொறித்த ஸ்டிக்கர்களையும் பார்த்துவிட்டு அக்கடையில் கணநேரம் நின்று எதுவும் வாங்காமல் மனத்தில் தெரிவுசெய்துவிட்டு உள்ளே நுழைகின்றனர். அவர்களைக் கண்டதும் மேத்யூவிடமிருந்து விலகி கேத்ரீன் அவனை நோக்கி ஓடி வருகிறாள். பாக்கியம் தன் கைவிட்டுப்போன பலூனைப் பிடிக்க மணல் வெளியெங்கும் தன் பட்டுப் பாவாடை சரசரக்க ஓடுகிறாள். அதைப் பிடித்த பூரிப்பில் ஆபிரகாமைப் பார்த்து வட்டமிட்டு அமர்ந்து காட்டுகிறாள். வாழ்த்துகளைப் பெற்றும் கூறியும் நலன் விசாரித்த பிறகு அவரவர் ஆடைகளைப் பிறரது ஆடைகளின் நேர்த்தியோடு ஒப்பிட்டு மனத்திற்குள் பொறுமிப் பொய்யாக நகைத்து நகரும் பெண்களையும் அப்போது கண்டான். வெளியே அம்மணக் குழந்தையொன்று பலூன் கேட்டு அவள் அம்மாவின் கன்னத்தை ஓயாமல் அடித்து அழுதுகொண்டிருந்தது. அவன் “பாவபட்டவங்க எஜமானே! இல்லாதவங்களுக்குச் செய்யறது ஆண்டவனுக்குச் செய்யறதுதான் எஜமானே!” என மாறாத குரலில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றுத் தள்ளி அழுக்கேறிய அருவருப்பான ஒருவன் படுத்துக்கிடந்தான். அவன் வண்ணச் சாக்பீஸ்களால் வரைந்திருந்த யேசுவின் ஓவியத்தில் நாணயங்கள் விழுந்தபடியிருந்தன. பாக்கியம் ஒடிப்போய் தன் கையிலிருந்த பலூனை அக்குழந்தைக்குத் தந்து அதைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள். அது அழுகையை நிறுத்திப் பலூன் கயிற்றை வேகமாக ஆட்டியது. அது அங்குமிங்கும் அசைவது கண்டு குலுங்கிச் சிரித்தது. அதை அருகிலிருந்து கண்கொட்டாமல் பார்த்த கேத்ரீன் பாக்கியத்தைப் பிரியத்துடன் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். பாக்கியம் ஆபிரகாமைக் கூட்டிவந்து அந்த இயேசுவின் உருவத்தைக் காட்டினாள். அவனுக்குத் தன் செயல் எண்ணித் தாங்க முடியாத மனவேதனை உண்டாயிற்று. அவனுக்கு உள்ளே ஏதோ உடைந்து அது உடலெங்கும் பரவி, கண்ணீராக வெளியேறிற்று. கேத்ரீனும் பாக்கியமும் ஆளுக்கொரு கைபிடித்து அக்குழந்தையை அழைத்துச் சென்றனர். அவர்கள் நடந்த வழிகளெங்கும் அமர்ந்திருந்த நோயாளிகள், குறைப்பிறவிகள், கைவிடப்பட்டவர்கள் அனைவரையும் அவர்கள் தொட்டு சொஸ்தப்படுத்தினர். அக்குழந்தை திரும்பி அவனைப் பார்த்தபோது அதில் தேவகுமாரனின் முகச்சாயலை ஆபிரகாம் கண்டான்.
ஆபிரகாம் கனவிலிருந்து வியர்வை பொங்கிய உடலோடு எழுந்தபோது விடிந்திருக்கவில்லை. பாக்கியம் பாயிலிருந்து விலகிக் கீழே வாய்பிளந்து தூங்குவது தெரிந்தது. அவன் பாக்கியத்தைக் கையெடுத்து வணங்கி வெளியே போனான். அப்போதும் சட்டைப்பையை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
அந்த அதிகாலையில் பிரான்சிஸின் வீட்டு மாடிப் படிக்கட்டுக்குக் கீழே இயல்பிற்கு மாறான அமைதியுடன் அவ்வீட்டு நாய் நாக்கைக் சுழற்றித் தன் மேல் அமரும் உண்ணிகளைப் பிடிக்க முயன்றுகொண்டிருந்தது. அது கேத்ரீன் சொன்னால் மறுபேச்சின்றிக் கேட்கும் என்பதை அவள் தன் அத்தையிடம் கூறியதை நினைத்துக்கொண்டான். சற்றுமுன் உள்ளே போன கேத்ரீன் என்னைப் பார்த்திருப்பாளா? கேத்ரீன் இன்று அணிந்திருந்த நிறத்திலேயே தான் பாக்கியமும் கனவில் அதே போன்ற உடையுடன் வந்ததை நினைத்ததும் மயிர்க்கால்கள் குத்திட்டு அது காற்றிற்கு அசைந்து ஆபிரகாமிற்குப் புல்லரித்தது. சிறிது நேரத்திற்குப் பின் அழைப்புமணியை அழுத்திவிட்டு அமைதியாக நின்றான். அது மெல்லிய இசையாக வீட்டினுள் ஒலித்தது. புதிய உடையுடனும் கலங்கிய கண்களுடனும் ஜேம்ஸ் வந்து கதவைத் திறந்து ஆபிரகாமைக் கண்டதும் சிரித்து “உள்ள வாங்க” என்றான். அக்குரலை அக்கனவில் கேட்டது போலவே ஆபிரகாமிற்குத் தோன்றிற்று. ஆமாம். பாக்கியம் யேசுவின் ஓவியத்தைக் காட்டியபோது தேவாலயத்திற்குள் பாடிக்கொண்டிருந்தது இவன் தானோ? அக்கனவில் தனக்கருகில் நின்றிருந்தவர்களில் பலரும் அக்குரலைக் கேட்டுத் தேவாலயத்திற்குள் நுழைந் ததை நினைவுபடுத்தித் தலையாட்டிக்கொண்டான். ஆபிரகாம் வீட்டினுள் நுழைய மனமின்றி வெளியிலேயே நின்றான். பிரான்சிஸ் அவனைக் கண்டதும் “கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்றார் புன்னகையுடன், தன் வயிற்று வலியை மறைத்தபடி ஜேம்ஸிம் அவனது அம்மாவும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு அவரிடம் மாத்திரைகள் உள்ள இடத்தைச் சுட்டிவிட்டுச் சர்ச்சை நோக்கி வேகமாக நடந்தனர். ஆபிரகாம் அப்படியே அவர் காலில் விழுந்து குலுங்கி அழுதான். அவர் பதறிய முகத்துடன “யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா” என்றவாறே அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் தலைகுனிந்து எதுவும் பேசாமல் தன் சட்டைப் பையிலிருந்து தங்கச் சிலுவையை எடுத்து அவரிடம் தந்தும் “மன்னியுங்கள் ஃபாதர்” எனக் கதறி அவர் கையை எடுத்துக் கண்ணில் ஏற்றிக்கொண்டான். அவருக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. அவன் அழுதும் தேம்பியும் அரற்றியும் நா குழறிப் பேச முயன்றது எதுவும் அவருக்குப் புரியவேயில்லை. அவர் அவனை ஒரு கணம் நேர்நிறுத்திப் பார்த்து அப்படியே தழுவிக்கொண்டார். ஆபிரகாமின் கண்ணீர் தன் தோளின் மேல் படர்வதை உணர்ந்து நெகிழ்ந்து அவன் முதுகைத் தட்டித் தந்து தேற்ற முயன்று, “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்றார். அவன் தலைதூக்கிப் பார்த்தபோது எதிர்ச் சுவரிலிருந்த படத்தில், வெள்ளை அங்கியைச் சிவப்பு சால்வை சுற்றியிருக்க இரு கைகளையும் அணைத்துக்கொள்ள அழைப்பது போல நீட்டியவாறு கனிந்த முகத்துடன் நிற்கும் யேசுவைக் கண்டான். தன் மீது பொழியும் அந்தக் கண்களிலிருந்த கருணையைக் கண்டு, தன் கண்களைத் துடைத்தபடியே ஃபாதர் பிரான்சிஸை ஆபிரகாம் மேலும் இறுகத் தழுவிக்கொண்டான்-நன்றி- காலச்சுவடு |